உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல ; அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது ; உரிமையானது. அதனால்தான், "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகை செய்திடல் வேண்டும்" என்றார் இராமலிங்க அடிகளார்.
சேதி சொல்லும் சிட்டுக்குருவியை கொண்டாடும் தேதி இன்று! உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக் குருவிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
கிராமங்களில் வாழ்பவருக்கும் இன்னும் அலாரமாக இருப்பது இதன் ஒளிதான். கீச் கீச் என்ற அந்த இசையை கேட்டு விழிக்கையில் இதமாகவும், புத்துணர்வுடனும் அந்த நாள் தொடங்கும். ஆனால் தற்போதைய சூழலில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. மேலும் இவை மனிதனுடன் ஒத்து வாழும் உயிரினமாகவே இருக்கிறது. இது மாடம்,பரண் மற்றும் ஓடுகளின் இடையில் கூடு கட்டி வாழும். இப்போது அடிக்கடி கட்டடங்களின் உட்பகுதியிலும் வாழ்கிறது. குறிப்பாக தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் மிருகக்காட்சி சாலைகள் ஆகிய இடங்களிலும் வாழ்கிறது.
காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை சிட்டுக்குருவி. பார்ப்பதற்கு அழகாக தென்படும் இந்த சிட்டுக்குருவியை காண்பித்து தாய் தன் பிள்ளைக்கு ஒரு காலத்தில் சோறு ஊட்டி வந்தாள். ஆனால், இந்தப் பறவையை இன்றைய குழந்தைகளுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 31 ஆண்டுகளாகும். இவை மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்ல பறவைகளாக கிளி, மைனா போல வளர்க்கவும் முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களை கொண்டு கூடு கட்டி வசிக்கின்றன.
ஊர்க்குருவி, சிட்டுக்குருவி, அடைக்கலாங்குருவி , தூக்கணங்குருவி , இராப்பாடிக்குருவி, வாற்கொண்டலாத்தி,கட்டுக்காடை ,பாற்குருவி, காட்டுள்ளான் , அக்காக்குருவி ,குயில் , கோகிலம் ,பஞ்சது ,பிகம் , வலாசகம் ,இசைக்குரற்கருவி ,களகண்டம், கொண்டலாத்தி , பாட்டாணி ,புழுக்கொத்தி ,பெருங்கொடை ,சூறைக்குருவி இன்னும் பல வகைகள் உள்ளன.
நாம் பார்த்தும், ரசித்தும் மகிழ்ந்த ஒரு சிறு பறவையினம் நம்மிடம் இருந்து விடைபெற்று விடக்கூடாது. முட்டையிட்டு அடைகாத்து தன் இனத்தை பெருக்கி மனித இனத்தை மகிழ்ச்சி படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குவதும், பாதுகாப்பதும் நமது பொறுப்பு. வீடுகளின் பால்கனியிலும் வீட்டின் சுற்றத்திலும் மரக்கன்றுகள் பூச்செடிகளும் வளர்த்து வந்தால் சிட்டுக்குருவி போன்ற பறவைகள் வந்து வசிக்கும் இருப்பிடமாக மாறும். இயன்ற அளவு நெல், திணை, ராகி போன்ற சிறு தானியங்களும், குடிக்க நீரும் சிட்டுக்குருவிகளுக்கும் பறவைகளுக்கும் வைத்து வரலாம்.