உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்! இன்று உலக புத்தக நாள் அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள். (ஏப்ரல் 23)
ஒரு மனிதனுக்கு புத்தம்தான் சிறந்த தோழன் என்ற கூற்று உள்ளது. புத்தகங்கள், அவற்றின் அனைத்து வடிவங்களிலும், கற்றுக்கொள்ளவும் நம்மை நாமே அறிந்து கொள்ளவும் அனுமதிக்கின்றன. அவை நம்மை மகிழ்விப்பதோடு, உலகத்தைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.
அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும்,
புரிதல், சகிப்புத்தன்மை
போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாட யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில்
ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது.
இந்த நாளில் மற்றொரு கவனிக்க தகுந்த விஷயமாக உலகின் சிறந்த எழுத்தாளர்களான
வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று
ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளாக அமைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களான மாரிஸ் ட்ரூன்,
ஹால்டோர் கே. லக்ஸ்னஸ், விளாடிமிர் நபோகோவ் மற்றும் மானுவல் மெஜியா வலேஜோ ஆகியோரின் பிறந்தநாளாக
உள்ளது.
ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம்
போன்றது. நமக்கு தெரியாத அனைத்து விஷயங்களையும் ஒரு புத்தகத்தில் நாம்
தெரிந்துக்கொள்ளலாம். கல்வி கற்பது ஒருநாளும் வீண்போவதில்லை. இந்தியா உள்ளிட்ட 100-ற்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
எனது சிறு வயது முதல் எனக்கு இருந்த ஆசைகளில் ஒன்று எனது சொந்த வீட்டில் ஒரு
புத்தக அலமாரியை வைக்க வேண்டும் என்பதே அவ்வாறே எனக்கு வசதிகள் வந்த பின்பு கட்டிய
வீட்டில் புத்தக அலமாரியை ஒன்றையும் அமைத்துக் கொண்டேன்.
இன்று முதல் படித்தேன்-இரசித்தேன் என்ற தலைப்புகளின் கீழ் நான் படித்து ரசித்த
(வரலாற்று நூல்கள், சுயசரிதைகள், அரசியல் மற்றும் சமூக நூல்கள்) மேற்கோள்களையும்
கருத்துக்களையும் உவமைகளையும் பழமொழிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மிகுந்த ஆனந்தம் அடைகிறேன்.
படித்தேன்-இரசித்தேன்
1. "வாதம் பலவீனப்படும்போதுதான் வாதிப்பவனுக்குக் கோபம் வரும். விவாதம் புரியும் இருவரில் யாருக்கு முதலில் கோபம் வருகிறதோ, அவன் தோல்வியடையத் தொடங்குகிறான்".2. “உலகத்திலுள்ள அத்தனை காவல்காரர்களும் தங்கள் கண்முன் நடமாடுகிற எல்லோரையும் திருடர்கள் என்று சந்தேகப்படுகிறார்கள். அதேபோல் உலகத்திலுள்ள அத்தனை திருடர்களும் தங்களை உற்றுப்பார்கிற எல்லோரையும் காவற்காரர்கள் என்று பயப்படுகிறார்கள்”.
3. "ஒரு மொழியை அவசியத்துக்காக யார் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் நயங்களையும், சமத்காரங்களையும் உண்டாக்கி அணி நலம்பட எழுதவோ பேசவோ அதை தாய் மொழியாகக் கொண்டவர்களால் தான் முடியும்"..